சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள பல அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம்.
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. நூற்றாண்டை கடந்த இந்த ரயில் நிலையத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி ரூ.842 கோடியில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக, ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் நடைமேம்பாலம், நடைமேடை விரிவாக்கம், மேற்கூரை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
இந்த மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, காந்தி - இர்வின் சாலைப் பகுதியில் அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின், 2-வது மற்றும் 3-வது தளங்கள் தலா, 3,442.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து மொத்தம் 122 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 68 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
மேலும், 2,842.13 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள 4-வது தளம், 62 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 34 இருசக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். இந்த வசதியினால் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறைக்கப்பட்டு, நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடையின்றி செல்ல முடியும்.
இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தில் 22 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், 24 மணி நேரமும் கண்காணிக்கும் ‘சிசிடிவி’ கேமரா, தீயணைப்பு பாதுகாப்பு உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பயணிகளின் வசதிக்காகக் கட்டணக் கழிப்பிடங்கள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், ஸ்மார்ட் லாக்கர் வசதிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதேபோல, மற்றொரு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலும் தயாராகி வருகிறது. இது முழுமையடையும் போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.