சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (டிச. 10) முதல் வரும் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.