மு.க.ஸ்டாலின்
சென்னை: “அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி” என தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர். ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர். 13 முறை சட்டமன்ற உறுப்பினர். தமிழகத்தின் முதல்வராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்.
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை.
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கருணாநிதி, உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று. அவர்தான் நமக்கு எல்லாம். அவரின்றி நாம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.