உயிரிழந்த சிறுவன் சஞ்சீவி | குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் திரண்டிருந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர்
கரூர்: வீட்டருகே உறை போட்டு மூடியிருந்து காரினுள் ஏறி விளையாடிய சிறுவன், கதவு பூட்டிக் கொண்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கழுகூரை சேர்ந்தவர் வேலு (36). மனைவி மாரிஸ்வரி (30). மகன் சஞ்சீவி (4). வேலு மாரிஸ்வரி தம்பதியனர் கொத்தனார், சித்தாளாக உள்ளனர். இவர்களின் மகன் சஞ்சீவி நேற்று அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே உறைப்போட்டு (கார் கவர்) மூடி நிறுத்தப்பட்டிருந்த காரினுள் ஏறி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கதவு பூட்டிக்கொண்டதால் திறக்க முடியாமல் சிறுவன் சஞ்சீவி வெளியேற முடியமல் சிக்கிகொண்டார்.
விளையாட சென்ற மகனை காணவில்லை என பதறிய பெற்றோர், உறவினர்கள் நீண்ட நேரமாகியும் கண்டு பிடிக்க முடியாமல் தவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் வீட்டருகே நின்ற காரின் உறையை அகற்றி விட்டு கண்ணாடி வழியாக காரினுள் பார்த்தப்போது சிறுவன் சஞ்சீவி காரினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக கார் கதவை திறந்த பெற்றோர் சிறுவனை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தோகை மலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் இருந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், திரண்டிருந்த கிராமத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.