சென்னை: எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம் என, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சுக்கு, அமைச்சர் வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட சமூகவலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சட்டப்பேரவைக்குள் வைத்து தமிழகத்தின் முதல்வர் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று, வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதல்வர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல, பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டப்பேரவைக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.