அமைச்சர் தங்கம் தென்னரசு

 
தமிழகம்

2025-26ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகள் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை முன்வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

சட்டசப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். குறிப்பாக, 2025-26 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை முன்வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பதிலளித்தார். அப்போது அவர் பேசும்போது, “2025-2026 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான அறிக்கையினை இம்மாமன்றத்தின் முன் வைக்கின்றேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 43,08,299 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 35,56,266 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 4,548.71 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலும், 297162 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.

          

2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாளன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், புதுப்பணிகள் மற்றும் துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதியொதுக்கம் தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின்வருமாறு:

மானியக் கோரிக்கை எண். 13: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)", அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2026 ஆம் ஆண்டின் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3,000 ரூபாய் வழங்குவதற்காக ரூ.6,95,705 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

மானியக் கோரிக்கை எண்.53: "சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை" 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயனாளிகளுக்கு தலா 5,000 ரூபாய் வழங்குவதற்காக கூடுதல் நிதியாக 3,913.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை எண் 16 'நிதித் துறை 2025-26 ஆம் ஆண்டில் உத்திரவாத மீட்பு நிதிக்கு மாற்றப்படுவதற்காக ரூ.3,08680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கை எண்.48: "போக்குவரத்துத் துறை", நடப்பு நிதியாண்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து இயற்கை எய்திய, ஓய்வுபெற்ற மற்றும் தன்விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஜூலை மாதம் 2023 முதல் மார்ச் மாதம் 2026 ஆம் ஆண்டு வரையிலான ஓய்வு காலப் பணப்பலன்களை வழங்குவதற்காக மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வட்டியில்லா வழிவகை முன்பணம் வழங்குவதற்கு 3,285.03 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் 161154 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

பேரவைத் தலைவர், 2025-2026 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன்.

SCROLL FOR NEXT