படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: “சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்துகளை திமுகவினருக்கும், கட்சி அலுவலகம் நடத்தவும் விட்டுக் கொடுக்கலாமா?” என்று திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரூ.50 கோடி மதிப்புடைய ரங்கநாதர் கோயில் சொத்துகளை ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் அபகரித்துள்ளதாக மாநகர குற்றப் பிரிவு போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 1866-ம் ஆண்டு 1027 என்ற டைட்டில் டீட்டில் பல்வேறு சர்வே எண்கள், உட்பிரிவுகள் என மொத்தம் 329 ஏக்கர் நிலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தம் என்றுள்ளது. 1910-ம் ஆண்டு இனாம் கமிஷனும் இதை உறுதி செய்துள்ளது. 1930-ம் ஆண்டு ‘அ’ பதிவேட்டில் 762/1 மற்றும் 762/2 ஆகிய சர்வே எண்கள் கோயில் சொத்து என்றுள்ளது.
இதில் 762/1 என்ற சர்வே எண் சொத்தை தான் ராம்குமார் தனது பெயருக்கு மாற்றம் செய்து கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.
முன்னதாக, 1998-ம் ஆண்டு அனைத்து சர்வே எண்களும் கோயிலுக்கு சொந்தமானது என்று இனாம் தீர்ப்பாயம் உறுதி செய்தது. கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று 2020-ம் ஆண்டு அறநிலையத் துறை தரப்பில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த வழக்குகள் 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
போலியாக ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக ராம்குமார் தனது பெயரில் சொத்தை மாற்றம் செய்துள்ளார். மூலப் பத்திரம் இருப்பதை மறைத்து தனிப்பட்ட நபரின் குடும்ப சொத்து என்றும், மூலப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று புதுச்சேரியில் உள்ள காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று, அந்த சான்றிதழை இணைந்து ஸ்ரீரங்கத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் திமுகவினர் அறிவியல் பூர்வமாக விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அங்குதான் திமுகவின் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ரூ.50 கோடி மதிப்புடைய சொத்தை ஒரு சாதாரண திமுக பகுதிச் செயலாளரால் காவல் துறை, வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத் துறை என இத்தனை துறைகளை ஏமாற்றி எப்படி பத்திரப் பதிவு செய்ய முடியும்?
இதன் பின்னணியில் மிகப் பெரிய ஆட்கள் இல்லாமல் செய்ய முடியாது. இதில், முன்னாள் அமைச்சர், அறநிலையத் துறை அதிகாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் சிவன் சொத்து குலநாசம் என்று வாய் கிழிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகிறார். சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்தை திமுகவினருக்கு, திமுகவினர் கட்சி அலுவலகம் நடத்த விட்டுக் கொடுக்கலாமா?
ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடம் இருந்து எனக்கு வந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களை ஆக்கிமித்துள்ள திமுகவினர் மீது பொது மக்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அவர்களிடம் இருந்து நிச்சயம் கோயில் சொத்துகள் மீட்கப்படும்” என்று அவர் கூறினார்.
உட்கட்சி பூசல்:
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு புகார் குறித்து திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் கூறியபோது, ‘‘காவல் துறை வழக்குப் பதிந்துள்ள சர்வே எண் சொத்து ரங்கசாமி ஐயங்காருக்கு பூர்வீக சொத்து. அதற்கு முன் ரங்கநாத தாத்தாசாரியாரின் பெயரில் 1895-ம் ஆண்டு முதல் உள்ளது.
திமுக நிர்வாகி ராம்குமார்
1903 ரங்கசாமி ஐயங்காரின் வாரிசுகளில் ஒருவர் நீதிபதியாகவும், ஒருவர் விஞ்ஞானியாகவும், ஒருவர் சிபிஐ வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர்கள். இவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னரே பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த சொத்து குறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நிலுவையில் இருப்பது தெரியாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பத்திரப் பதிவு விஷயத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலும் இதுகுறித்து விரிவாக என்னால் பேசமுடியாது. என் கட்சியிலேயே 2, 3 பேர் எனது பதவிக்கு ஆசைபட்டு காய் நகர்த்தி வருகின்றனர். அவர்களே இதைச் செய்திருக்கலாம்.
நான் மூன்று தலைமுறையாக திமுகவில் இருக்கிறேன். சிறந்த பகுதிச்செயலாளர் என்ற விருதை பெற்றுள்ளேன். நான் பொறுப்பில் இருக்கும்போது ஸ்ரீரங்கம் 7 மாநகராட்சி வார்டுகளிலும், எம்எல்ஏ தேர்தல், எம்.பி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது” என்றார்.