அமைச்சர் ரமேஷ்
சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரி கோயிலாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரவி மனோகரன் (பழநி தொகுதி) பேசும்போது, “பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
அங்கு கோயில் அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்தான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அங்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் பதில் அளிக்கு்ம் போது, “பழநி முருகன் கோயிலில் அன்னதான திட்ட பணி, கோயில் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை அண்மையில் ஆய்வு செய்தேன். அப்போது உறுப்பினரும் என்னோடு வந்திருந்தார். தமிழ்க்கடவுள் முருகன். பழநி முருகன் கோயிலை இ்ந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்மாதிரி கோயிலாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதன்படி இந்தியாவே திரும்பி பார்க்கும் வண்ணம் இக்கோயில் முன்மாதிரி கோயிலாக உயர்த்தப்படும். அனைத்து வசதிகளுடன் கோயில் மேம்படுத்தப்படும்” என்றார்.
அள்ளிக் கொடுத்த பழநி முருகன்: முன்னதாக, உறுப்பினர் ரவி மனோகரன் பேசுகையில், “பழநி முருகன் கோயிலுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிகம் சென்று வருகிறார். அவருக்கு பழநி முருகன் கேட்டதையும் கொடுத்தார். அவர் கேட்காததையு்ம் அள்ளி அள்ளி கொடுத்துள்ளார். எனவே, பழநி குறித்து அமைச்சர் செங்கோட்டையன்தான் அதிகம் பேச வேண்டும்” என்றார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “பழநி முருகன் நான் கேட்டதையும், கேட்காததையும் அள்ளி அள்ளி கொடுத்துள்ளார் என உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். பழநி முருகனைப் போல் தமிழக முதல்வர் விஜய்யும் எனக்கு அள்ளி அள்ளி கொடுத்துள்ளார். என்னை இங்கே அமரவைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.