சென்னை: ‘தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து விரைவில் சுமுக முடிவு காணப்படும்’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கொண்டு வந்தார்.
அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யக்கூடாது என காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பாக அரசு சார்பில் 2 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு இதுவரை 93 உடை மாற்றும் அறைகளுடன் கூடிய கழிப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் 107 இடங்கள் கண்டறியப்பட்டு செப்.15-க்குள் வசதிகள் ஏற்படுத்தப்படும். முகக்கவசம், கையுறைகள் வழங்கப்படும்.
உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்குவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.762 ஆக இருந்த நிலையில், அதை ரூ.832 ஆக உயர்த்துவது தொடர்பாக சுமுகமான முடிவு எடுக்கப்படும்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நபருக்கு 4 சீருடை வழங்கப்படும். 450 புதிய பேட்டரி 3 சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் வருகை - புறப்பாடு பதிவு முறைக்குப் பதிலாக மீண்டும் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒருநாள் வார விடுமுறை, மகப்பேறு காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.