சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ‘டிஎன்-அறிவு’ எனும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க ‘டிஎன் அறிவு’ எனும் புதிய பாடத்திட்டம் 2027-28-ம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க ரூ.12 கோடியில் ‘திறன் ப்ளஸ்’ விரிவாக்கம் செய்யப்படும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங் களை உள்ளடக்கிய ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதுதவிர அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதை ஊக்குவிக்க சிறப்புப் பயிற்சி வழங்கும் ‘வெற்றிப் பாதை’ திட்டம் 172 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களின் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த ரூ.18 கோடியில் மதிச்சுடர் திட்டம், மாணவர்களின் புதுமைச் சிந்தனையை வளர்க்க ‘டிஎன் இக்னைட்’ திட்டம் கொண்டுவரப்படும்.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்காக 6,279 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன்கீழ் மாதம் ஒருநாள் மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு செல்லலாம்.
மேலும், 50 அரசுப் பள்ளிகள் ‘ஸ்போர்ட்ஸ் ப்ளஸ்’ சிறப்புப் பள்ளிகளாக உருவாக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய விளையாட்டு சீருடை வழங்கப்படும்.
சென்னை புத்தகக் காட்சிக்கான அரசு மானியம் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரிய 25 தமிழ் நூல்கள் மறுபதிப்பு செய்யப்படும் என்பன உட்பட 31 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
துறை செயலருக்கு நன்றி
அமைச்சர் ராஜ்மோகன் தனது பதிலுரையின் முடிவில், பள்ளிக் கல்வித்துறையின் தூணாக விளங் கும் செயலர் பி.சந்தரமோகன், இயக்குநர் லதா, அரசு மாதிரிப் பள்ளி உறுப்பினர் செயலர் ஆர். சுதன், தொடக்க கல்வி இயக்குநர் பு.ஆ.நரேஷ், அரசு தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுகன்யா, ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, மதுசூதனரெட்டி, சமீரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.