அமைச்சர் ராஜேஷ்குமார்
சென்னை: “அரசு கொடுக்கும் காரை காங்கிரஸ் உறுப்பினர்கள் நிச்சயமாக பெற்றுக் கொள்வார்கள். கார் இருந்தால் தொகுதி முழுவதும் எளிதாகப் பயணிக்க முடியும்” என்று சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகு, அதன் பண்பாடு, கட்டிடச் சிறப்புகளை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சுற்றுலா துறை சார்பில் தொடர்ந்து இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. பக்கிங்ஹாம் கால்வாயில் படகுச் சவாரி மேற்கொள்வதற்கு ஏற்ப, அந்த கால்வாய் தூர்வாரப்பட உள்ளது. வெளிநாடுகளுக்கு இணையாக சென்னை மாநகரை மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஏவிஎம் கால்வாய் 22 கி.மீ. நீளம் உள்ளது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டு 9 கி.மீ. தூரம் அந்த கால்வாயை முழுமையாக சீரமைத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.
எம்எல்ஏக்களுக்கு கார் கொடுப்பதில் தவறு இல்லை. அது நல்ல திட்டம். மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதாக கூற முடியாது. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் நாங்கள். அரசின் பெயர்ப் பலகை கொண்ட காரில் செல்லும்போது எம்எல்ஏக்களுக்கும் மரியாதையாக இருக்கும்.
கார் இருந்தால் தொகுதி முழுவதும் எளிதாகப் பயணிக்க முடியும். மக்களின் குறைகள், பிரச்சினைகளை விரைந்து தீர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும். என் கார் இன்னும் கடனில்தான் உள்ளது. அரசு கொடுக்கும் காரை காங்கிரஸ் உறுப்பினர்கள் நிச்சயமாக பெற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்.