அமைச்சர் ரகுபதி
சென்னை: “2 மணி நேரம்கூட வெயிலில் நிற்க முடியாதவர் விஜய். இவரால் மக்களுக்கு எப்படி பணியாற்ற முடியும்?. எனவே, சுகவாசிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,683 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 13.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், திருமயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு 3-ம் வீதியில் உள்ள ராணியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
இதேபோல, ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் தனது சொந்த ஊரான மறமடக்கி அரசுப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கை பதிவு செய்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படாமல் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது. தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. எஸ்ஐஆர் பணிக்குப் பிறகும் இரட்டைப் பதிவு, இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் வாக்குப்பதிவு 10 சதவீதம் குறையும். அதேசயம், கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரிக்கும்.
இளம் வாக்காளர்களை கவரும் வகையில், அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் செய்துள்ளோம். நடிகர் எம்ஐிஆர் என்பவர் வேறு. விஜய் என்பவர் வேறு என்பதை வித்தியாசப்படுத்தி இருக்கிறோம். 2 மணி நேரம் கூட வெயிலில் நிற்க முடியாதவர் விஜய்.
இவரால் மக்களுக்கு எப்படி பணியாற்ற முடியும்?. எனவே, சுகவாசிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஏற்கெனவே செல்வாக்கை இழந்து விட்டார். இத்தேர்தலிலும் தோல்வியை சந்திப்பார்,” என்று அவர் தெரிவித்தார்.