பழனிவேல் தியாகராஜன்
மதுரை: “வாழ்க்கையில் வாக்குக்குப் பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்கு பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி” என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மத்தி சட்டப்பேரவைத் தொகுதியின் ஆறுமுச்சந்தி பகுதியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்துப் பேசினார்.
இதில் பழனிவேல் தியாகராஜன் பேசியது: “1980-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆதரவுடன் பழநெடுமாறன், எனது தந்தை பழனிவேல் ராஜனை எதிர்த்து நின்றார். அப்படியிருந்தும் இரு குடும்பத்தினரும் நெருங்கிய உறவுடன்தான் உள்ளன. அந்தக் காலத்தில் அரசியல் நாகரிகம், பண்பு, மாண்பு இருந்தது. இன்றைக்கு அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக, பல ஆண்டுகளாக மத்திய தொகுதியில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி அவர்களுடைய வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ஏ.சி.சண்முகத்தின் அங்கீகாரம் பெறாத கட்சிக்காக இறக்குமதியானவர்தான் வேட்பாளர் சுந்தர் சி. அவர் வாழ்க்கையில் ஒரு நாள்கூட பொதுப்பணியில் ஒரு ரூபாய்கூட செலவு செய்தது இல்லை. போராட்டத்தில் பங்கேற்றதும் இல்லை. அவருக்கு இரட்டை இலை சின்னத்தை குத்தகைக்குக் கொடுத்துள்ளார்கள்.
இந்த பிடிஆருக்கு வாழ்க்கையில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி. ஆனால், ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது. தொடர்ந்து தோல்வி, தோல்வி, தோல்வி” என்று அவர் பேசினார்.