தமிழகம்

“பெரியாறு, மேகேதாட்டு பிரச்சினையில் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

என்.கணேஷ்ராஜ்

தேனி: “பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமனறம் உத்தரவிட்டும் திமுக அரசு இதனை செயல்படுத்த தவறிவிட்டது. ஆனால், நாங்கள் பெரியாறு அணை மட்டுமல்லாது, மேகேதாட்டு பிரச்சினையிலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” என்று தேனியில் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் இரா.வைத்திநாதன், தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சபரிஐங்கரன், ஜெகநாத்மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறிய: “குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. எந்த சமரசமும் இல்லாமல் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீரை திருடுபவர்கள், கல்குவாரிகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் கடந்த ஆட்சியில் திமுக இதனை செய்யத் தவறவிட்டு விட்டது. நிர்ணயித்த அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தாததால் 5 மாவட்ட சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இனி தொடராது. பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்றுவோம்.

பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை, மேகேதாட்டு அணை என்று அரசியல் காரணங்களுக்காக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். இதற்காக சட்ட நடவடிக்கைகளையும் தொடருவோம். பெரியாறு அணையில் முதல்போகத்துக்கு நீர் திறக்க வழிவகை செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT