சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகைக்குள் 723 செவிலியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பனியால் செவிலியர்களில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறையில் 10 ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றும் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான செவிலியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று 4 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களின் ஆணவத்தைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் செவிலியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செவிலியர்கள் போராட்டத்தில் உள்ள நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்கள். நிரந்தரப் பணியாளர்களைப் போலவே அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரியுள்ளார்கள். இது சம்பந்தமாக அரசு பரிசீலித்து வருகிறது. அதன் மீதும் விரைவில் முடிவெடுக்கும்.
இதுவரை இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆண்டுதோறும் காலிப்பணியடங்கள் தாண்டி 1300 செவிலியர்கள் முதல்வர் திறந்துவைத்த அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
மேலும் 7400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர். இவர்களுக்காக 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பொங்கலுக்கு முன்னர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மற்றவை காலிப்பணியிடங்கள் உருவாகும் பட்சத்தில் படிப்படியாக நிரப்பப்படும். மேலும் அந்த காலிப்பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.