தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்
புதுச்சேரி: சகோதரரை தாக்கியது தொடர்பான தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக. 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரியகுளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு, “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தியது.
அதையடுத்து ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில், இன்று முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவர் விசாரித்தார்.
அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் இவ்வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து இவ்வழக்கை வரும் செப்.4-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.