சென்னை: சார் பதிவாளர் அலுவலகங் களில் பத்திரப் பதிவு மேற்கொள்ளும் பொதுமக்கள் உரிய கட்டணம் தவிர வேறு எந்த வகையிலும், யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைசார்ந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று ஆய்வு செய்தார். பத்திரப் பதிவுக்கு வந்தவர்களிடம் கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சார் பதிவாளர் அலுவலகங் களில் பத்திரப் பதிவு மேற்கொள்ளும்போது உரிய கட்டணம் தவிர வேறு எந்த வகையிலும், யாருக்கும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படுவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு எளிதாக்கப்படும்
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுமக்களிடம் இருந்து பத்திரப் பதிவுக்காக பெறப்பட்ட, தேங்கிய கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பத்திரப் பதிவு நடவடிக்கைகளை மேலும் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.