மதுரை: மதுரை மாவட்டத்தில் 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை, திருமங்கலம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பதிவுக்கு வந்திருந்த மக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் யாராவது கேட்கிறார்களா, பணம் கேட்டு தொந்தரவு செய்தால் என்னிடம் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்.
மேலும், பணியில் இருந்த அலுவலர்களிடம் அலுவலக பணிகள் குறித்து கேட்டறிந்து, அலுவலக ஆவண பதிவேடுகளை ஆய்வு செய்தார். எத்தனை பதிவுகள் வந்துள்ளன, முடிக்கப்பட்ட பதிவுகள் எத்தனை? கடந்த கால பத்திரப்பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பொது மக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவண பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே பத்திரங்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.