சென்னை: ‘எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களிடம் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் காலத்துக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
‘எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் படிப்பும், ஓராண்டு பயிற்சியும் பெற வேண்டும். அனைத்து மருத்துவ கல்லூரிகளும் முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் ஐந்தரை ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம் வசூலிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்பது குறித்து சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி நேற்று கொண்டுவந்தார்.
அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: எம்பிபிஎஸ் மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பும், ஒரு ஆண்டு பயிற்சி படிப்பும் படிப்பதுதான் விதியாகும்.
முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும்தான் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 6 மாதத்துக்கு கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் வசூலிப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
குழு அமைத்து ஆய்வு செய்ததில், 11 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார் குறித்து ஆராயும் போது, மாணவர்கள் தரப்பில் அதிக கட்டணம் வழங்கிய தற்கான ஆவணம் இல்லை. இருப்பினும் அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகள், விதிகளை மீறி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.