தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 22 வரை அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி வரை குறையும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மன்னார் வளைகுடா முதல் தென் கர்நாடகத்தின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 9 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT