சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் ஏப்.19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மகாராஷ்டிரா, வடக்கு உள் கர்நாடகா, தமிழகம் வழியாக மன்னார் வளைகுடா வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஏப்.16) முதல் 21-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நாளை முதல் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.