சென்னை: தமிழகத்தில் நாளை (மார்ச் 28) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 28, 29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30, 31-ம் தேதிகளில் மேற்கண்ட பகுதிகளில் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஏப்.1-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 2-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியின் இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை நாளை (மார்ச் 28) வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், 29, 30-ம் தேதிகளில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 77 டிகிரி முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.