தமிழகம்

பள்ளிக்கல்வித்துறையில் திமுக ஆட்சியில் பணம் வசூலுக்கு நானே சாட்சி: நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: தமிழக உயர்கல்வியில் எண்ணிக்கையா, தரமா என்கிற கேள்வி எழுகிறது.

எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம் தான் முக்கியம். முதல்வர் விஜய்யின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றிருந்தார்.

அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை. ஒரு தரச்சான்றிதழ்கூட வாங்கவில்லை.

தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதனால்தான், வேலைவாய்ப்பு களும் கிடைக்கிறது. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் நிறைய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. நிறைய முறைகேடுகள் குறித்து அதில் சொல்லப்பட்டன.

நிறைய பேர் மீது வழக்குகளும் போட்டிருந்தார்கள். கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது.

நானே பாதிக்கப்பட்டேன்

அதில் பாதிக்கப்பட்டவர் களில் நானும் ஒருவன். கட்டாயப்படுத்தி பணத்தை வாங்கினார்கள். இந்த விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். பேரவையில் சாட்சி சாட்சி என்று கேட்கிறார்கள். ஆவண சாட்சி வந்துவிட்டுப் போகட்டும். பள்ளிகளில் பணம் வசூலிக்கப்பட்ட தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நானே ஒரு சாட்சிதான்.

இதுகுறித்து பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், வேறு வழியில்லை. இந்த விவகாரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். நாளைக்கு வேண்டுமானால் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கட்டும்.

அல்லது விசாரணைக்கு அழைக்கட்டும். நானே வருகிறேன். அவரை நேரில் சந்திக்கிறேன். எந்த இடத்தில், எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை என்னாலேயே தெளிவாக சொல்ல முடியும். இதுதான் சாட்சி. நானே சாட்சி என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT