விருதுநகர்: தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்காக மரியாதை கொடுத்து பொறுமையுடன் கடந்து போகிறேன் என்று ‘கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்’ என்று கூறிய வைகோவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துக்கிறது என்றும், காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும் என்றும், இது ஒன்றும் புதிதல்ல என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மாணிக்கம் தாகூர் எம்.பி. அளித்த பேட்டியில் விருதுநகர் தொகுதியில் இனி போட்டியிட மாட்டேன் என்று கூறினார். இக்கருத்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது கருத்தை தனது எக்ஸ் தளத்தில் "கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போகிறேன். பயந்துக்கிட்டு இல்லை அண்ணன் வைகோ அவர்களே" என்று இன்று பதிவிட்டு, வைகோவுக்கு பதில் அளித்துள்ளார். இருவரது கருத்து மோதல்களும் திமுக கூட்டணிக்குள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.