மாணிக்கம் தாகூர் | கோப்புப் படம் 
தமிழகம்

“வார்த்தை விளையாட்டு வேண்டாம்” - திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் அறிவுரை

தமிழினி

சென்னை: “அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். வார்த்தை விளையாட்டு வேண்டாம்” என “அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது” எனக் கூறிய திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது ஆதரவு நிலை. அமைச்சரவையில் இடம்பெற்றது தோழமை நிலை. அடுத்த நிலை கூட்டணி அமைக்கும் நிலை, பெயர் சூட்டுவதற்கான நிலை. இதில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரவு நிலையோடு நிற்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம்.

தவெக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்து, முதல்வர் விஜய் தோழமையை உருவாக்கியுள்ளார். பரஸ்பர நம்பிக்கையோடும், சகோதரத்துவத்தோடும் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மூன்று கட்சிகளிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து, அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஓர் அங்கம்தான். வார்த்தை விளையாட்டு விளையாட இது தொலைக்காட்சி அல்ல; திருமாவளவன் கொண்ட கொள்கையில் தெளிவாக இருப்பவர்.

பாஜக, ஆர்எஸ்எஸின் வகுப்புவாத, மதவாத கொள்கையை எதிர்த்து எந்த சஞ்சலமும் இல்லாமல் போராடுபவர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவரின் நிலை என்பது அவர் கட்சியின் நிலை. அது குறித்து நாங்கள் பதில் சொல்ல முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT