சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை: ‘மத்திய அரசு - ரோஹித் நாதன்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 11, 2026 அன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், "1993-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையின்படி ஓபிசி பிரிவினருக்கான ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் பெற்றோரின் சம்பள வருமானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் 2004-ம் ஆண்டு கடிதம், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிராக சட்டவிரோதமான, பகிரங்க பாகுபாட்டை ஏற்படுத்தியது.
எனவே, பாதிக்கப்பட்ட, தகுதியுடைய அனைவருக்கும் கூடுதல் தற்காலிகப் பணியிடங்களை உருவாக்கி, அவர்களை 6 மாதங்களுக்குள் பணியமர்த்த வேண்டும்" என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த தீர்ப்பை செயல்படுத்தாமல் முடக்கும் நோக்கில், மத்திய அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. எனவே இது தொடர்பான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்று, நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனடியாக கூடுதல் தற்காலிகப் பணியிடங்கள் மூலம் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.