தமிழகம்

மாம்பழம் சின்னம் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உட்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது.

          

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நேற்று முறையிடப்பட்டது. அப்போது மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், ராமதாஸ் தரப்பில் இன்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

தங்கள் வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT