தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கு விலக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விலக்களித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006- 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடலூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜூலை 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணைக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT