மதுரை: மதுரை விமானநிலைய விரிவாக்கம், எய்ம்ஸ், தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைப்பு, போக்குவரத்து நெரிசல் போன்ற மக்களை அதிகம் பாதித்த பிரச்சினைகளை பற்றி பேசாத வேட்பாளர்கள், ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்ததால் அவர்களது பிரச் சாரம் மக்களிடம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
இதனால், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக 8, திமுக 7 தொகுதிகளில் போட்டியிட்டன.
காங்கிரஸ் 2, பாஜக, மதிமுக, புதிய நீதி கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியிலும், நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் தலா 10 தொகுதிகளிலும், சசிகலா கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
போட்டியிட்ட ஒரு சில வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவருமே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கடந்த 5 ஆண்டுகள் நிலவிய முக்கியப் பிரச்சினைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி பேசாமல், வெறும் அரசியல், தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்தனர்.
மதுரை மத்தியில் திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நிறை வேற்றப்போகும் தொலைநோக்கு திட்டங்களைப் பற்றி பேசவில்லை.
மாறாக, அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி.யை படிக்காதவர், சினிமா சங்கி, அறிவில்லாதவர், அவரது மனைவி குஷ்பு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை போல் பல கட்சிகளுக்குத் தாவியவர் போன்ற தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார்.
அதற்கு சுந்தர் சி-யும், அவரது மனைவி குஷ்புவும் பதிலுக்கு பழனிவேல் தியாகராஜன் மீது அவரது வளர்ப்பு பற்றியும், தலைக்கனம் பிடித்தவர், அவர் எதற்காக நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அவரது தனிப்பட்ட அரசியல் சரிவைப் பற்றியும் பேசினர்.
தெருவிளக்கு, சாக்கடை, குப்பை உள்ளிட்ட சாதாரணப் பிரச்சினையை மையப்படுத்தி பேசிய சுந்தர்.சி, மக்களுக்கான எதிர்காலத் திட்டங்கள், கடந்த 5 ஆண்டுகளில் பழனிவேல் தியாகராஜன் எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறினார்.
பழனிவேல் தியாராஜன், அவரது தொகுதிக்கு நிறைவேற்ற மறந்த திட்டங்களை பற்றி பேசவில்லை. மீனாட்சியம்மன் கோயிலை, வாராணசியுடன் ஒப்பிட்டு அவர் பேசிய பிரச்சாரம் மக்களிடம் ஓரளவு எடுபட்டது. மற்றபடி இருவரது தனிப்பட்ட தாக்குதல்கள் மக்களைக் கவரவில்லை.
ஆனால், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி சுந்தர் சி-க்கு நல்ல விளம்பரத்தை மட்டுமே தேடி தந்தது. அவர் வெற்றிபெறுவதற்கு அது உதவுமா? என்பது தெரியவில்லை. மாறாக இரு வேட்பாளர்களைப் பற்றிய தவறான எண்ணத்தைத்தான் மக்களிடம் ஏற்படுத்தியது.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதித்தும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிஐடியு, விசிக தொழிற்சங்கம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.
ஆனால், திமுக கூட்டணியுடன் சேர்ந்து அவர்கள் இந்தத் தேர்தலைச் சந்தித்ததால் மறந்தும்கூட மக்கள் பிரச்சினை பற்றி பிரச்சாரத்தில் அவர்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தியவர்களே தேர்தல் நேரத் தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்யவில்லை.
மதுரை விமானநிலைய விரிவாக்கம், வைகை ஆற்றை கைவிட்ட பொதுப்பணித்துறை, எய்ம்ஸ், ஐடி நிறுவனங்கள், சுற்றுலா மேம்பாடு, மின் கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றம், பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற மக்களை அதிகம் பாதித்த பிரச்சினைகளைப் பற்றி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆழமாகப் பேசவில்லை.
சில இடங்களில் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றனர் தவிர, அவற்றை கையில் எடுத்தால் மத்திய, மாநில அரசுகளைப் பகைத்துக்கொள்ள நேரிடும் என்று கடந்து சென்றனர். ஆளும்கட்சியினர், எதிர்க் கட்சியினர், பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதிலும், சமுதாய வாக்குகளை வளைப் பதிலுமே கவனம் செலுத்தியதால் அவர்களின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை.
புதிதாக தேர்தல் களத்தில் குதித்த தவெக வேட்பாளர்கள் பிரச்சாரமும், மதுரை மாவட்டத்தில் மக்களை ஈர்க்கவில்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே ஓரளவு மக்கள் நலன் சார்ந்தும், அவர்கள் பிரச்சினைகளைப் பற்றியும் பிரச்சாரம் செய்தனர். அதனால், மாவட்டத்தில் ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி, சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.