சென்னை: தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழையும், தேனி மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக. தமிழகத்தில் இன்று (ஜூன் 16), மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
17, 18 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், மதுரை, மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் 19 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்று ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும். 17 முதல் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 7 செமீ, கடலூர் மாவட்டம் வேப்பூர், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடியில் தலா 6 செமீ, காட்டு மயிலூர், குப்பநத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்படி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.