ஆளுநர் கைலாஷ்நாதன்
புதுச்சேரி: போலி மருந்து விவகாரம் தொடர்பாக விவாதிக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று டெல்லிக்கு சென்றுள்ளார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ புதுச்சேரிக்கு வரவிருக்கிறது.
புதுவையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்றும், நாளையும் அரசு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 29-ம் தேதி குடியரசு துணைத்தலைவர் புதுவைக்கு வருகிறார். இது தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. மேலும், புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் புதிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
சமீபத்தில் போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவுக்கு, ஜிஎஸ்டி மோசடிக்கு உதவிய ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வரி முறைகேடுக்கு உதவி செய்த ஜிஎஸ்டி அதிகாரி பரிதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும் சில அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி வருகிறது இதனிடையே போலி மருந்து விவகாரம் வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். இதனையொட்டி, ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் புதுவைக்கு வந்து விசாரணையை தொடங்க உள்ளனர்.