சென்னை: “வாருங்கள் இயக்கத்தை பலப்படுத்துவோம். மக்களோடு இணைந்து பயணிப்போம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம். 2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக புதிதாக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பதவியை ஏற்க அல்ல, பொறுப்பை ஏற்கச் செல்கிறேன். தலைவனாக அல்ல, உங்கள் தம்பியாகவும், அண்ணனாகவும், தோழனாகவும் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மகத்தான இயக்கம். அந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. 2026-ல் ஆட்சியில் பங்கு பெற்றோம். இப்போது நம் அடுத்த இலக்கு – 2029. இந்தியாவின் ஆட்சியை மக்களுக்கு மீட்டுத் தந்து, நம் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம்.
வாருங்கள் இயக்கத்தை பலப்படுத்துவோம். மக்களோடு இணைந்து பயணிப்போம். 2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம். ஒன்றிணைவோம், உழைப்போம், வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4 மணி அளவில் மாணிக்கம் தாகூர் கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க உள்ளார்.