சென்னை: உலக மகளிர் தினம் (மார்ச் 8) நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டி மக்கள் பவனில் அமைக்கப்பட்டுள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஈரோடு கொடுமுடியில் நிறுவப்பட்டுள்ள பழம்பெரும் பாடகிகே.பி.சுந்தராம்பாளின் முழு உருவச்சிலையை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மகளிர் தினத்தையொட்டி, முதல்வரை அரசு பெண் சட்ட அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை கனிமொழி எம்.பி. தலைமையில், திமுக மகளிர் அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா, மகளிர் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். புது வண்ணாரப்பேட்டை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுகவினர் வழங்கினர். தமாகா சார்பில் சென்னை சிஐடி காலனியில் நடைபெற்ற விழாவில், சாதனை பெண்களுக்கு விருதுகளையும் கேடயங்களையும் வழங்கி ஜி.கே.வாசன் கவுரவித்தார்.
தலைவர்கள் வாழ்த்து: மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துப்பதிவில், ‘‘வெல்லும் தமிழ்ப் பெண்களே. நீங்கள் வெல்வதற்கு உலகும், உங்களுக்குத் துணை நிற்க திமுக-வும் இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன் நிற்க நமது அரசு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியாக இணைவோம். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.
இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோகுல மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.