சென்னை: உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று (மே 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திமுக தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: உழைப்புதான் நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். அந்த வகையில், உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மே தினத்தில், தொழிலாளர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் அடிப்படை காரணம் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு. அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். உழைப்போரை உயர்த்தி சமத்துவத்தை நிலை நிறுத்துவோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இதுவரை இல்லாத அளவுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலை பிரதமர் மோடியின் அரசு தொடுத்து வருகிறது. உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம்.
தி.க தலைவர் கி.வீரமணி: பன்னாட்டு முதலாளிகளாலும், பிறவி முதலாளிகளாலும் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடி, தொழிலாளர்களின் வாழ்வில் விடியலைக் கொண்டுவந்த நாள் இன்று.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: உழைப்பவருக்கே உலகம் உரியது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதை உயிர் நீத்து போராடி பெற்றுக்கொடுத்த தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தொழிலாளர்களின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட போராட்டங்களினாலும் மட்டுமே, அவர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த இயலும். அத்தகைய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகக் கட்டியமைக்க, இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்.
பாமக தலைவர் அன்புமணி: நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம், பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்து கொடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மக்களின் தேவைகளுக்கும், முதலாளிகளின் லாபத்துக்கும், தொழில்களின் மேம்பாட்டுக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைத்து களைக்கும் தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேறி, மகிழ்வுடன் வாழ துணை நிற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உழைக்கும் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக போராடி அவற்றை மீட்டெடுத்த மே தினத்தில், நாம் கண்டிருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், முதுகெலும்பான உழைப்பாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றி நினைவுகூர்வோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.