எல்.முருகன்

 
தமிழகம்

“பிரதமர் மோடியின் மதுரை பிரச்சார கூட்டத்துக்குப் பிறகு திமுக காணாமல் போகும்” - எல்.முருகன்

கி.பார்த்திபன்

நாமக்கல்: “மதுரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்துக்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும்” என பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக என்ற கட்சியால் தமிழகம் சின்னாபின்னமாகி வருகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் திமுக அரசு மதிக்கவில்லை.

எனவே, தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி மக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். கந்த சஷ்டி பாராயணத்தை இந்து மக்கள் பாராயணம் செய்ய வேண்டும்.

          

மார்ச் 1-ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுரை வரவுள்ளார். அங்கு நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், திமுக காணாமல் போகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மிக பலம் பொருந்திய கூட்டணியாக உள்ளது. அதைக் கண்டு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் அவர் எதிர்க்கட்சியினரை பார்த்து பொறுப்பற்ற வார்த்தைகளை பேசியுள்ளார்.

அரசியல் கட்சியினர் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை அந்தந்த அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவு. அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய சொல்லி மூன்று முறை அமலாக்கத் துறை கடிதம் எழுதியும் டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து முதல்வர் ஊழலுக்கு துணை போகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

தொழில்நுட்பத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமரின் லட்சியமாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT