கிருஷ்ணசாமி

 
தமிழகம்

“எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு” - கிருஷ்ணசாமி கருத்து

மு.வேல்சங்கர்

சென்னை: “அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கொண்டு மேற்கொள்வதால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ராமேசுவரத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. கவுரவ கொலையை தடுக்க சட்டம் கொண்டு வந்ததுபோல, கட்டாயக் காதல், கட்டாய திருமணத்தை தடுக்க சட்டமியற்ற வேணடும்.

தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியின மக்கள் வாழும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணித்துள்ளனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒரு மாதத்தில் செய்து முடிக்க முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கொண்டு இந்தப் பணியை மேற்கொள்வதால் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது.

எனவே, வாக்குசாவடி நிலை அலுவலர்களைக் கொண்டு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். இப்பணியில் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற நினைப்பவர்கள் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலவும் ஒரு கட்சி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு விடிவுகாலம் வரும். கூட்டணி ஆட்சி, பூரண மதுவிலக்கு ஆகிய இரண்டு விஷயங்களே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT