கோப்புப் படம்
தமிழகத்தில் இனி ஒரு கட்சியின் தலைமையிலான ஆட்சி கூடாது, கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இருப்பினும் தேர்தல் காலங்களில் பல்வேறு காரணங்களால் வாக்குகள் பிரிகின்றன. இதனால் புதிய தமிழகம் கட்சியின் வாக்குகளை ஒருங்கிணைத்து அவற்றை பெரும் சக்தியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி அமையக் கூடாது. ஒரு கட்சி மட்டும் ஆட்சி செய்யும்போது அடித்தட்டு மக்களின் நிலை தெரியாமலே போகிறது. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும், கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டு பின்னர் வெளியில் இருந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் பலனில்லை.
கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. தனிக்கட்சி ஆட்சி என்பது காலனி ஆதிக்கம் போல்தான். புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதைப் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்