கோப்புப் படம்
சென்னை: ‘தமிழக குடிநீர் திட்டங்களுக்கான பங்கு ரூ.3,200 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசியதாவது: பென்னாகரம் தொகுதி நிலத்தடி நீர் புளோரைடு நச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. ஆனால், மாவட்டங்களின் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறவில்லை.
நான் வைத்த கோரிக்கை அடிப்படையில், ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.9 ஆயிரம் கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரியிலேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்குப் பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ரூ.2,900 கோடியில் குடிநீர்திட்டத்தை, ஜப்பான் வங்கி நிதிஉதவி பெற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அந்நிறுவனமும் ஒப்புதல் கொடுத்துள்ளது. அவர்கள் விரைவில் பார்வையிட உள்ளனர். இதற்கிடையே ஜல்ஜீவன் திட்டத்தில் மத்திய அரசுதரவேண்டிய பங்குத் தொகையைவழங்கவில்லை. அந்த வகையில், 18 குடிநீர் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்குத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசு தர வேண்டிய பங்குத்தொகை ரூ.3,200 கோடி. அதையும் நிறுத்திவைத்து விட்டனர். மத்திய அரசின்நிதி வராததால், கடன் தரும்
நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ளன. 18 திட்டங்களுக்குத் தேவையான ரூ.5,500 கோடி நிதியை தமிழக அரசு சார்பில் முதல்வர் வழங்கியுள்ளார். மத்திய அரசு இந்தியா முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தை நிறுத்தி விட்டது.
அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று அறிக்கை கொடுத்துவிட்டனர். இருப்பினும் நிதி வருவது தாமதமாகிறது. மத்திய அரசின் நிதி வந்தவுடன் பென்னாகரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.