தமிழகம்

‘ஓய்வூதிய திட்டம் சீரமைப்பு’ - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அதிமுக வாக்குறுதிகள்

தமிழினி

சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும் மற்றும் 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை அதிமுக தலைமையகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர் - ஆசிரியர் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்:

> பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.

> அரசுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

          

> அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குடிமைப் பணியாளர்கள் கூட்டு மன்றக் கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும்.

> மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு ஊதிய விகிதத்தை அமல்படுத்தியவுடன், காலதாமதமின்றி 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

> சத்துணவு பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 1098 (மிசன் வாத்சல்யா) குழந்தைகள் காப்பக பணியாளர்கள் இதுபோன்ற அனைத்துப் பணியாளர்களுக்கும் அரசு காலிப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

> சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறாத அரசுப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் புதிய சிறப்பு ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படும்.

> சமூகநலத் துறையின்கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் சத்துணவு ஊழியர்கள். உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உள்ளிட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஊதியம் முறைப்படுத்தப்படும்.

> மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்வதுடன், அவர்களது ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

> தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு பொது காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

SCROLL FOR NEXT