புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம். இதற்குப் பதிலடி கொடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று பேசி உள்ளார். அவரது பேச்சு புலன் விசாரணையில் தலையிடுவதாக உள்ளது.
இதற்கிடையே, ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று கூட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகள், ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் சிபிஐ புலன் விசாரணையை பாதிக்கும்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலன் விசாரணையை சிபிஐ நிறைவு செய்யும் வரை, தமிழக முதல்வர் விஜய், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையிலும், வழக்கு குறித்தும் பேச தடை விதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித நலத்திட்டங்களையும் சிபிஐயிடம் தாக்கல் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் வகுக்கும் விதிகளின்படி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். சாட்சிகள், ஆதாரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமானுல்லா கான், ஷீல் நாகு அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அகமதி ஆஜராகி, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள். சாட்சியங்களைக் கலைக்க முற்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூரில் ஜூலை 10 -ம் தேதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் மனுவை இன்று விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வர இருப்பது முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.