புதுடெல்லி: “மாணவர் நலனுக்காகக் களத்தில் நின்ற என் தலைவி பிரியங்கா காந்தியையும் எங்களையும் அதிகார மமதையில் அத்துமீறித் தாக்கினாலும், சிறையில் அடைத்தாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. நீதி கிடைக்கும் வரை எங்கள் அறப்போர் தொடரும்” என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சியின் மூத்தலைவர்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பேருந்துகளில் ஏற்றிச் சென்றது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாணவர்களின் கனவுகளோடு விளையாடும் இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினால் கைதா ? மாணவர் நலனுக்காகக் களத்தில் நின்ற என் தலைவி பிரியங்கா காந்தியையும் எங்களையும் அதிகார மமதையில் அத்துமீறித் தாக்கினாலும், சிறையில் அடைத்தாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. நீதி கிடைக்கும் வரை எங்கள் அறப்போர் தொடரும்!” என்று எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.