தமிழகம்

கரூர் விவகாரம்: அரசு வேலை வழங்குவதற்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

கி.மகாராஜன்

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன், நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பாக இன்று ஆஜரானார்.

அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அதோடு, சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அதை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதே. உச்ச நீதிமன்றத்திலேயே இந்த கோரிக்கையை முன் வைக்கலாமே? மனுவாக தாக்கல் செய்தால், வழக்கம் போல் விசாரணைக்கு எடுக்கப்படும்” என்று கூறியதோடு, முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT