மதுரை: எனது யோசனையை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை என கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். பெரும்பாலான அமைச்சர்கள் முதன்முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால் நிர்வாகத்தில் நிலைபெற அவகாசம் தேவை. 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி கலையாது. வெளியில் இருப்போர் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தாலும் வெற்றியடையாது.
காங்கிரஸ் அமைச்சர் விசுவநாதன் பற்றி ஆளுநரிடம் கொடுத்த புகார் தேவையில்லாத சர்ச்சை. ஆளுநருக்கு வைகை ஆற்றை ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. ஆளுநர்களும் அரசியல் சாசனத்துக்கும் மேலே செயல்படுகின்றனர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2031-ல்தான் நடக்கும். பட்ஜெட்டுக்கு பிறகு தவெக ஆட்சி மீது விமர்சனம் வைப்போம். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டு பற்றி தெரியாது.
அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் சிலர் விலகுகின்றனர். அதிமுக இருக்க வேண்டும். அது அழிவது ஜனநாயகத்துக்கும் சரியல்ல. யாரையும் தவெக சேர்த்துக் கொள்ள வேண்டாம். பெரும்பான்மை இருக்கிறது. அவர்கள் எதற்காக ராஜினாமா செய்துவிட்டு வருகின்றனர் என சிந்திக்க வேண்டும். எனது யோசனையை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை. மற்ற கட்சியிலா கேட்கப் போகின்றனர். காங்கிரஸ் புதிய தலைவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.