மேகேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீஸார் நிறுத்தினர்.
ஓசூர்: மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓசூர் வழியாக தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் பெங்களூருவுக்கு இயக்கப்பட்டன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தியும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதனால் நேற்று காலை தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக போலீஸாரும், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கர்நாடக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் காலை முதல் வழக்கம்போல தமிழக அரசு பேருந்துகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்று வந்தன.
கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அத்திப்பள்ளியிருந்து பேரணியாக வந்து கர்நாடக நுழைவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக பேருந்துகள் மற்றும் கார், லாரிகளை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால், பொதுமக்கள் தமிழக எல்லையிருந்து கர்நாடக மாநிலத்துக்கு நடந்து சென்று அங்கிருந்து ஆட்டோவில் அத்திப்பள்ளிக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பிற ஊர்களுக்குச் சென்றனர்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை கர்நாடக போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்ற பிறகு ஜூஜூவாடியில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை சுமார் 15 நிமிடங்கள் கழித்து கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல அனுமதித்தனர். அதன்பிறகு, எந்த தடங்கலும் இல்லாமல், நாள் முழுவதும் தமிழக பேருந்துகள் பெங்களூருக்குச் சென்றன.
இதுகுறித்து தமிழக போலீஸார் கூறும்போது. “கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், அங்கு 80 சதவீதம் கடைகள் திறந்திருந்தன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல சென்று வந்தன. மாநில எல்லையில் கன்னடஅமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது மட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டன” என்றனர்.