சென்னை: “காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயல்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.
உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதித் தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம்: ‘மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர்... ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது.’ (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: பக்கம் 460)
மறுக்க முடியாத உண்மைகளும் தரவுகளும்:
தற்போதைய இலக்கு: காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) ஜூன் மாதத்துக்கு 9.91 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சி தண்ணீரைத் திறக்க தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
வறட்சிக் கால விதிமுறை: வறட்சிக் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் (Pro-rata) தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: பக்கம் 448). பற்றாக்குறை ஏற்படும் போது, அது ஒட்டுமொத்தப் படுகைக்கும் விகிதாச்சாரப்படியே பிரிக்கப்பட வேண்டும் - கர்நாடகா தன்னிச்சையாக அணைக் கதவுகளை மூட முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.