தூத்துக்குடி: நம்மை பலப்படுத்திக் கொண்டால் யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகளிடம் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), கருணாநிதி (கோவில்பட்டி), தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கனிமொழி பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் எதிர்பாராத வகையில் தோல்வியை தழுவியுள்ளோம். அதுகுறித்து ஆய்வு செய்ய, தலைவர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். அந்த குழுவினரிடம் கட்சி நிர்வாகிகள் உண்மை நிலவரங்களை தயக்கமின்றி கூற வேண்டும். அது நமது கட்சியை மறுகட்டமைப்பு செய்ய உதவியாக இருக்கும். மேலும், கூட்டணி பற்றி சிந்திக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நம்மை நாம் பலப்படுத்திக் கொண்டால், யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியும். இவ்வாறு பேசினார்.
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.