கனிமொழி எம்.பி

 
தமிழகம்

“தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்” - கனிமொழி எம்.பி

டெக்ஸ்டர்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக, நாள்தோறும் இதுபோன்று வரும் செய்திகளால் தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். 

சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. 

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT