கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து ராஜவீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

 

படம்: ஜெ.மனோகரன்

தமிழகம்

“செந்தில் பாலாஜி பெறப் போகும் வெற்றிக்கு சாட்சி இதுதான்...” - கமல்ஹாசன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார். ராஜவீதியில் அவர் பேசியதாவது: கோவை தெற்கு தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகள் இல்லை. இந்த தொகுதி மக்களுடன் பேசியிருக்கிறேன்.

பழகியிருக்கிறேன். இது என் மக்கள். உங்கள் தொகுதிக்கு நீங்கள் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இது இப்போது நம் தொகுதியாக மாறி உள்ளது. ஒரு பைசாகூட வாங்காமல் அத்தனை வாக்குகளை மக்கள் எனக்கு செலுத்தினர்.

அந்த அன்பினால் வந்த வாக்குகள், இந்த தேர்தலில் செந்தில் பாலாஜிக்கும் கிடைக்கும். எனது எம்.பி. நிதி ரூ. 1 கோடியே 12 லட்சத்தை கோவையில் நீச்சல் குளம் உருவாக்க அளித்துள்ளேன்.

இது உதவி அல்ல. கடமை. மற்ற மாநிலங்கள் பெருமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடத்தில் நிற்கிறது. 15 கட்சிகளை ஒன்றாக இணைப்பது, அரசியல் வியூகம் மட்டுமல்ல. மிகவும் பெருந்தன்மையுடன் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணியை அமைத்துள்ளார்.

திமுகவை வீழ்த்துவதாக சொல்பவர்களுக்கு ஒரேயொரு முதலாளி, வடக்கில்தான் இருக்கிறார். மெட்ரோ ரயில் விடுவதற்கான மக்கள் தொகை கோவையில் இல்லை என்கிறது மத்திய

அரசு. ஆனால் வட மாநிலங்களில் மெட்ரோ வசதியை கொடுத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் 96 வார்டுகளில் திமுகவை வெற்றி பெற வைத்துள்ளார். தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை கோவை உருவாக்க உள்ளது. ஏற்கெனவே இங்கு போட்டியிட்டு வென்றவர், தொகுதி மாறியது செந்தில் பாலாஜி பெறப்போகும் வெற்றிக்கு சாட்சி.

தமிழ்நாட்டின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை கடந்த மக்களவைத் தேர்தலில் காண்பித்தோம். இனி மீண்டும் வரும் 23-ம் தேதி நிரூபிப்போம். வந்தாரை வாழ வைப்போம். வாகை சூட வந்தால் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணியை ஆதரித்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கமல் பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT