மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்து, 10 பேருக்கு அதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலாளர் முருகானந்தம், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன்.படம்: ம.பிரபு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னையில் `வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் தலைப்பில் தமிழகத்தின் சாதனை பெண்களின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
இதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கி பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் சத்தான உணவு, குழந்தைகளுக்கான கல்விக்குச் செலவு என வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது. மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தியவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை, 1 கோடியே 13 லட்சத்து 75,492 பேருக்கு வழங்கியிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை அதிகரித்து, 16 லட்சத்து 94,339 பேருக்கு ரூ.1,000 போட்டுவிட்டோம். இனி 1 கோடியே 30 லட்சத்து 69,831 பேருக்கு மாதம் தொடர்ந்து ரூ.1,000 கிடைக்கும். தலைநிமிரும் தமிழகத்தில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும். இந்த தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் கல்விக்கு பயன்பட வேண்டும். தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பெண்கள், தொழில் முனைவோர், தோழி விடுதி பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் மட்டுமே உள்ள நாதாஸ்வர குழுவின் வாத்திய நிகழ்ச்சி, பெண் பட்டதாரிகள் கொண்ட இசைநிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்துறை, மருத்துவமனை என பல துறைகளில் நிர்வாக பொறுப்பில் உள்ள பெண் ஆளுமைகள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், இஸ்ரோ திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., தலைமை செயலாளர் முருகானந்தம், நடிகர் சத்யராஜ், நடிகைகள் ரோகிணி, தேவயானி, சினிமா இயக்குநர்கள் ராஜு முருகன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.