கும்பகோணம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு தொடர்பான தஞ்சாவூர் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள 8,000-க்கும் அதிகமான பள்ளிவாசல்கள், மஸ்ஜித்களை மையமாகக் கொண்டு 2026, ஜன.28-ம் தேதி சுவாமிமலை நான்குவழிச் சாலை அருகில் உள்ள மைதானத்தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
மஹல்லா ஜமா அத்-களில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைவு தெரிவித்துள்ளார். இது, பாஜகவுக்கு எதிரான மாநாடு அல்ல.
முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரிகள் என யாரும் கிடையாது. இன்று எதிரிகளாக நினைப்பவர்கள், நாளைக்கு நண்பர்களாக மாறுவர். இது, அரசியலில் சிறந்த பாடமாகும். இந்தியாவில் உள்ள 4,296 சமுதாயங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கும், முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நாங்கள் அண்ணன்- தம்பி போல ஒற்றுமையாக தமிழகத்தில் இருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக பேச்சுவார்த்தைக் குழு அமைத்து எங்களை அழைக்கும் போது இதை நாங்கள் எடுத்துக் கூறுவோம். முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று 16 தொகுதிகளை ஒதுக்கினார் கருணாநிதி.
அதேபோல, இப்போதும் 16 தொகுதிகளை முஸ்லிம் சமுதாயத்துக்கு அளிக்க வேண்டும் என்றும், அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்க உள்ளோம் என்றார்.